ஆலங்குளம்,ஏப்.29: ஆலங்குளம் நேருஜி நகரில் வசித்து வந்தவர் ஆறுமுகம் மகன் மகேந்திரன் (36). இவர் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஜெனரேட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தென்காசி அருகே ஆயிரப்பேரியை சேர்ந்த மாலதி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பாரதி (6) என்ற மகளும், சுதர்சன் (4) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மகேந்திரன் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் சரியாக குணமடையவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அவரது மனைவி ஆயிரப்பேரியில் கோயில் திருவிழாவுக்கு தனது குழந்தைகளுடன் சென்று பங்கேற்றார். இதனால் வீட்டில் தனியாக இருந்துவந்த மகேந்திரன், தீராத முதுகுவலியால் துடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்ததுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திருவிழாவில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மனைவி தனது கணவன் மகேந்திரன் தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலங்குளம் போலீசார், மகேந்திரனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதனிடையே வீட்டின் அறையில் தூக்கிட்டு இறந்த மகேந்திரன் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் போலீசில் சிக்கியது. அதில் அவர் எனக்கு ‘பேக் பெயின்’ அதிகமாக இருப்பதால் உங்களை விட்டு செல்கிறேன். பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள். தனக்கு ஒருவர் பணம் தர வேண்டும். இவ்வாறு அதில் எழுதப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.