தூத்துக்குடி, ஏப். 29: ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த சர்வக்கட்சி போராட்ட குழு தலைவர் ராமசாமி தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக மதுக்கடைகள் என்பதே இல்லை. தற்போது சில தனிநபர்கள், மனமகிழ் மன்றம் என்ற பெயரிலும், டாஸ்மாக் கடை மற்றும் மதுகூடத்துடன் கூடிய 4 கடைகள் கொண்டு வர முயற்சி செய்வதை அறிகிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூர் தாசில்தார், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர், மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், கலால் உதவி ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம்.
ஆனாலும் மதுக்கடைகள் தொடங்க ஆயத்த பணிகள் நடந்து கொண்டிருந்ததால் கடந்த 15ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும், கடந்த 21ம் தேதி சாலை மறியலிலும் ஈடுபட்டோம். 33 சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த ஊர் ஆறுமுகநேரி. இங்குள்ள திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 20 இந்து கோயில்கள், 5 கிறிஸ்தவ ஆலயங்கள், 5 பள்ளிகள், ஊர் பொது சிவன் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளது. எனவே ஆறுமுகநேரி பகுதியில் எலைட் உயர் ரக மதுபான கூடமோ, டாஸ்மாக் மதுபான கடையோ அமைக்க அனுமதி வழங்க வேண்டாம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.