சென்னை: ஆபாச குறுஞ்செய்தி, புகைப்படங்கள் அனுப்பி பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தாம்பரம் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை அருகே உள்ள கண்ணகிநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 8 பெண் காவலர்கள் பணிபுரிந்தனர். தாம்பரம் மாநகர காவல்துறையின் ஆயுதப்படையில் பணிபுரியும் இவர்கள், மாற்றுப் பணியாக கண்ணகிநகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் இந்த பெண் காவலர்கள், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் அண்மையில் ஒரு புகார் அளித்தனர்.
அந்த புகாரில், கண்ணகிநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துசாமி, தங்களது கைப் பேசிக்கு ஆபாச குறுஞ்செய்திகள், ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அவரை கண்டித்தபோது, பழிவாங்கும் நோக்கத்துடன் கடுமையான பணிகளில் எங்களை அவர் ஈடுபடுத்தினார். அதன் பின்னரும் பாலியல் தொல்லை கொடுப்பதை அவர் விடவில்லை என தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யும்படி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் உயர் அதிகாரிகள், பெண் காவலர்களின் புகார் குறித்து விசாரணை செய்தனர்.
பின்னர் இது தொடர்பான அறிக்கையை காவல் ஆணையரிடம் சமர்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் முத்துசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று உத்தரவிட்டார். அதேவேளையில் கண்ணகிநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருந்து 8 பெண் காவலர்களும் விடுவிக்கப்பட்டு வேறு பணிக்கு மாற்றப்பட்டனர்.