கும்மிடிப்பூண்டி, நவ. 10: ரயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்தப்பட இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் உணவுபொருள் துணை வட்டாட்சியர் பறக்கும் படை அருள் வளவன் தலைமையில் கும்மிடிப்பூண்டி மார்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூளுர்பேட்டை வரை செல்லும் புறநகர் ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அதிகாரிகள் மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையத்தில் நேற்று ரயில் பெட்டிகளில் ஏறி ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வரை நிறுத்தங்களில் கம்பார்ட்மெண்ட் சோதனை செய்தனர். இதில், பயணிகளின் இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு பைகளில் கட்டப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இதில், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிறு பைகளின் எண்ணிக்கை 20க்கும் மேற்பட்ட பைகளில் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி பைக்ளுக்கு யாரும் உரிமை கோரவில்லை. தமிழகத்தில் இலவசமாக கொடுக்கப்படும் ரேஷன் அரிசியை கிலோ ₹5-6 வரை வாங்கி, ஆந்திராவிற்கு கடத்தி அங்கு அந்த அரிசி பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழகத்தில் கிலோ ₹20-30 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் சோதனை குறித்து பறக்கும் படை துணை தாசில்தார் அருள் வளவன் கூறியதாவது: இந்த சோதனையின் 2 டன் பறிமுதல் செய்யப்பட்டு அரசு உணவுக் பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ஆந்திரவிற்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் மின்ரயில்களில் திடீர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.