ஆலந்தூர், மே 27: ஆதம்பாக்கம் கருணீகர் தெரு வழியாக செல்லும் பாதாள சாக்கடை பிரதான குழாய் கடந்த வாரம் அதிக அழுத்தம் காரணமாக வெடித்தது. இதனால் சாக்கடை கழிவுநீர் வெளியேறியதுடன் பள்ளமும் ஏற்பட்டது. இதனையடுத்து ஆலந்தூர் மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் உடைந்த குழாயினை மாற்றி புதிய குழாய் அமைத்தனர். இந்த பணி கடந்த 3 நாட்களுக்கு முன்பு முடிந்த போதிலும் தோண்டப்பட்ட பள்ளத்தில் சரிவர மணலை கொட்டி நிரப்பாததால் ஆங்காங்கே பள்ளமும் மேடுமாக காணப்படுகிறது.
இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் ஊர்ந்து செல்வதுடன் நெரிசலும் ஏற்படுகிறது. விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி சீருடை, நோட்டு புத்தகங்கள், பைகள் போன்றவற்றை வாங்க வருபவர்கள் சாலை வசதி சரியில்லாததால் சிரமப்படுகின்றனர். எனவே, குடிநீர் வாரிய அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பது அங்குள்ள வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.