Sunday, June 11, 2023
Home » ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தமாகுங்கள்

ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தமாகுங்கள்

by kannappan

ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். விண்மீன்கள் வானத்திலிருந்து விழ, வான்வெளிக் கோள்கள் அதிர, வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்ற, அப்போது மிகுந்த வல்லமையோடும், மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின் மீது வருவார். ‘‘அவர் தம் தூதரை பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துக்கொள்ளப் பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்’’. (மத்தேயு  24 : 31). அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதையும், அந்நாளுக்காய் நாம் எவ்வாறு ஆயத்தமாய் இருக்க வேண்டுமென்பதையும் பத்துக் கண்ணியர் உவமைகள் வாயிலாக மிக அழகாக விளக்குகின்றார்.மணமகனை எதிர் கொள்ள மணமகளின் தோழியர் பத்துபேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்துபேர் அறிவிலிகள், ஐந்துபேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால், தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடைய ஐவரும் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந்தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். அப்போது, ‘‘இதோ மணமகன் வருகிறார் அவரை எதிர் கொள்ள வாருங்கள்’’ என உரத்தக் குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் அனைவரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குப்படுத்தினர். அப்போது தன்னுடன் எண்ணெய் கொண்டு வராத ஐந்து பெண்களும், எண்ணெய் கொண்டு வந்த பிற ஐந்துப் பெண்களைப் பார்த்து, ‘‘எங்கள் விளக்குகள் அணைந்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’’ என்றார்கள். எனவே தன்னுடன் எண்ணெய் வைத்திருந்த ஐந்து முன்மதியுடைய பெண்களும் மறுமொழியாக, ‘‘உங்களுக்கும், எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே,  வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வது தான் நல்லது’’ என்றார்கள். பெண்களும் வணிகரிடம் போய் திரும்பி வருவதற்குள் மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் மணமக்களுடன் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு, ஐந்து பெண்களும் எண்ணெயுடன் திரும்பி வந்து, ‘‘ஐயா, ஐயா, எங்களுக்கு கதவை திறந்துவிடும்’’ என்றார்கள். ஆனால், அவர் அப்பெண்களிடம் உங்களை எனக்கு யாரென தெரியாது என்று கூறி கதவை அடைத்து விட்டார். ஆயத்தப்படுதலும், ஆயத்தமாய் இருப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே, மணமகனைப் பார்க்க ஆயத்தமில்லா வந்த இப்பெண்களுக்கே இந்த நிலை என்றால், ஆண்டவருடைய வருகைக்காய், அவரைக் காண நாம் எவ்வாறு ஆயத்தப்பட வேண்டும். நம் உடலும், உள்ளமும், நமது வாழ்க்கையும் ஆண்டவரது பரிசுத்த பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறதா? என்பதனை சிந்தித்து ஆண்டவருடைய வருகைக்காய் ஆயத்தமாவோம்.தொகுப்பு: ஜெரால்டின் ஜெனிபர்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi