கீழ்வேளூர், ஏப். 29: நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிரை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மன்மதசாமி(31). இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வீட்டிற்கு சென்றுள்ளார் . அப்போது வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் அருகே லோடு ஆட்டோவும், இருசக்கர வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியது. இதில் பலத்த காயமடைந்த இளைஞர் மன்மதசாமி மற்றும் அவரது நண்பர் அருண் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மன்மதசாமியை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மன்மதசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.