கலசப்பாக்கம், ஜூலை 7: கலசப்பாக்கம் அருகே ஆற்றுக்கால்வாயில் தவறி விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல் சோழங்குப்பம் ஊராட்சி, வெள்ளிக்குப்பம் கிராமத்தைவர் சேர்ந்த நடராஜன் மனைவி சகுந்தலா(70). இவர் தனக்கு சொந்தமான வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு நேற்று ஓட்டிச்சென்றார். அவரது பேரன் முகிலரசன்(6) என்பவரை உடன் அழைத்து சென்றார்.
அப்போது, மிருகண்டா நதி ஆற்றுக்கால்வாயில் வெள்ளாடு ஒன்று தவறி விழுந்தது. அதனை காப்பாற்ற சிறுவன் முகிலரசன் முயன்றபோது ஆற்றுக்கால்வாய் நீரில் மூழ்கினார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த பாட்டி சகுந்தலா கதறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் சிறுவன் உயிரிழந்ததால் சடலத்தை மீட்டனர். ஆட்டை உயிருடன் மீட்டனர்.
தகவல் அறிந்த ஆதமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டை காப்பாற்ற முயன்று கால்வாயில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.