பாடாலூர், ஆக.5: ஆலத்தூர் தாலுகா ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பக்தர்களால் பெருமையோடு வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஆடி மாத 3 வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு மஹா அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் சாற்றி சிறப்பு மலர் அலங்காரம் நடைபெற்றது.
பின்பு தீபாராதனை நடைபெற்றது. மூலவரை பக்தர்கள் தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து அரோகரா, அரோகரா என்ற கோஷத்துடன் மலைக்கோயிலை சுற்றி வெள்ளிதேர் இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம். விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், இரூர்,பாடாலூர், நாரணமங்கலம், மருதடி, குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மாவிலிங்கை, ஆலத்தூர்கேட் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.