அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பூப்பந்தாட்ட அணி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். கரூர் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த பூப்பந்தாட்ட அணியினர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இறுதிப் போட்டியில் பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி மாணவர்கள், கரூர் புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை வென்று கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். அதேபோன்று, 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் அரை இறுதிப் போட்டியில், கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளியை வென்று, இறுதிப் போட்டியில் கரூர் புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை வென்று பள்ளபட்டி அசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். இதன் மூலம் மேற்கண்ட இரண்டு பிரிவு அணிகளும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.