Friday, July 18, 2025
Home மாவட்டம்கடலூர் அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.8.90 லட்சம் மோசடி செய்தவர் கைது

அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.8.90 லட்சம் மோசடி செய்தவர் கைது

by Ranjith

 

கடலூர், ஜூன் 30: இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.8.90 லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பனையாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகள் எழிலரசி (36). இவர் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் எம்எஸ்சி, எம்பில், எம்எட் படித்து முடித்து வேலை தேடி வந்தேன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன் தொழுதூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தபோது, அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வந்த அரசு பேருந்து ஓட்டுனரான மணி மூலம் குறிஞ்சிப்பாடி தாலுகா வடக்குத்து கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்(51) என்பவர் எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமானார். அப்போது கோவிந்தன் தனக்கு தலைமைச் செயலகத்தில் பல அதிகாரிகளை நன்கு தெரியும் என கூறி என்னிடம் படிப்புக்கு ஏற்றாற்போல், இந்து சமய அறநிலையத்துறையில் என்னால் வேலை வாங்கி தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

ஆனால் அதற்கு ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதை நம்பி நாங்கள் அவருக்கு வங்கி கணக்கு மூலமாக ரூ.5 லட்சமும், ரொக்கமாக ரூ.5 லட்சம் பணமும் கொடுத்தோம். பணத்தைப் பெற்றுக் கொண்ட கோவிந்தன் நான்கு வருடங்கள் ஆகியும், வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் கொடுத்த பணத்தை கேட்டபோது, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மட்டும் கொடுத்தார். பாக்கி பணத்தை இதுவரை தரவில்லை.

மீண்டும் கேட்டபோது, பணம் தர முடியாது என்று எங்களுக்கு மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்பி ஜெயக்குமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தினி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி கோவிந்தனை நேற்று கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi