ஜெயங்கொண்டம், மே 30: அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க 2-வது மாவட்ட பேரவை கூட்டம் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு கவிதா, நூற்பாரு, சண்முகசுந்தரம், அமுதா, செல்வராசு, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்டத் துணைத் தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் கட்டுமான நல வாரியத்தில் வழங்கும் சலுகைகளை அமைப்பு சாரா நல வாரியத்திலும் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பென்ஷன் ரூ.3000 வழங்க வேண்டும், பெண் தொழிலாளருக்கு 50 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும், ஜெயங்கொண்டம் பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும், தேளூர் கொள்முதல் நிலையத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வறை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, குண்டும் குழியுமான ரோட்டை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், தரைக்கடை வெண்டர் கமிட்டியை கூட்டி அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும், அனைத்து நெசவாளர்களுக்கும் 300 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளாளர் கண்ணன், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் சேப்பெருமாள், பொது தொழிலாளர் சங்க செயலாளர் மெய்யப்பன், பொருளாளர் சோபியா, குடிநீர் வாரியம் கோவிந்தராஜ், முந்திரி தொழிலாளர் சங்க நிர்வாகி தனவேல், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகி கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.