அரியலூர், ஜூலை 18: அரியலூர் அருகே தொடர் வழிபறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், பழஞ்சநல்லூர் மேலத் தெருவை சேர்ந்தவர், மொச்சக்கொட்டை மகன் ஜோதி (42) என்பவர் தற்போது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் முத்துசேர்வாமடத்தில் குடியிருந்து வருகிறார். இவர் மீன்சுருட்டி மற்றும் காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். மீன்சுருட்டி போலீசில் வழிப்பறி சம்மந்தமாக வழக்கு பதியப்பட்டு கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
மேலும் எதிரி வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் கேட்டுக்கொண்டார். அதன்படி, அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா மேல் பரிந்துரையை ஏற்று, மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி நேற்று ஜோதி குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான ஆணை பிரதிகள் நேற்று திருச்சி மத்திய சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.