அரியலூர், ஜூலை 5: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரைக் கண்டித்து அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் முன்பாக தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தை சார்ந்த கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றாமல், சங்க நிர்வாகிகளை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக கூறி, வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநர் மற்றும் சங்க நிர்வாகிகளை தாக்கிய காவல் துறையினரை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அம்பேத்கர், காந்தி, நிர்வாகி காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.