அரியலூர், ஜுலை 7: அரியலூர் மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்றுமுன் தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் சகாதேவன் தலைமை வகித்து பேசினார். சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான சின்னப்பா கலந்து கொண்டு, கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசி திருச்சியில் நடைபெறும் மதிமுக மாநில மாநாட்டு அழைப்பிதழ்களை வெளியிட்டு அனைவருக்கும் வழங்கினார்.
மாவட்டச் செயலர் ராமநாதன் கலந்து கொண்டு திருச்சி காட்டூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 12ம் தேதி நடைபெறும் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து மாநில மாநாட்டிலும் அரியலூர் மாவட்டத்தில் இருந்து கட்சியினர் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூட்டத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், ஒன்றியச் செயலர்கள் சங்கர், எழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.