அரியலூர், ஏப். 17: அரியலூர் நகரில் பெருகிவரும் தெரு நாய்களின் பெருக்கத்தால் பொது மக்களுக்கு இடையூறுகள் இருந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அமல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரியலூர் நகரில் இறைச்சி கடைகள் அமைந்துள்ள பகுதி, பொதுமக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் நாய் கடியால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளின் அருகே கூட்டம் கூட்டமாக நாய்களின் தொல்லை இருந்து வருகிறது.
தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்தும் விதமாக பிரத்தியேக நாய் பிடி வாகனம், கருத்தடைமுறை போன்ற மக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போன்ற நடைமுறைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், வீட்டு வளர்ப்பு, தெரு நாய்களின் கணக்கெடுப்பை நடத்தி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .