மண்டபம்,ஏப்.25: உச்சிப்புளி அருகே அரியமான் மற்றும் பிரப்பன்வலசை கடற்கரை பகுதிகளையும் இணைக்கும் வகையில், குறுக்கு சாலை அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சிப்புளி அருகே ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் தென்கடலில் அரியமான் கடற்கரை அமைந்துள்ளது. அதுபோல இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைத்துரத்தில் தென் கடலோரப்பகுதியில் பிரப்பன்வலசை பீச் உள்ளது. இந்த பிரப்பன் வலசை கடற்கரை பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில், தமிாக அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் நீர் சறுக்கு விளையாட்டு சம்பந்தமாக திட்டங்களை செயல்படுத்த அறிவித்து உள்ளது. அதனால் இந்த பிரப்பன் வலசை பீச்சில் எந்த நேரமும் சுற்றுலா பயணிகள் வருகை உள்ளது. அதுபோல மாவட்ட நிர்வாகம் அரியமான் கடற்கரை பகுதியில் தமிழக முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு விளையாட்டு திடல், படகு சவாரி உள்பட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதுபோல அதியமான் கடற்கரை பகுதியில் தனியார் நிறுவனங்களும் தங்கும் விடுதிகள். உணவு விடுதிகளை அமைத்துள்ளன. இதனால் அரியமான் கடற்கரை பகுதிக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து இரவு தங்கி பொழுதை போக்கி செல்கின்றனர். இந்நிலையில் அரியமான் பீச்சுக்கும், பிரப்பன் வலசை பீச் பகுதிக்கும் ஒரே நாட்களில் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும் என்றால், மீண்டும் தேசிய நெடுஞ்சாலை வந்து பல கிலோ மீட்டர் தொலைதூரத்தில் சுற்றி செல்ல வேண்டும். ஆனால் அரியமான் பீச்சில் இருந்து பிரப்பன்வலசை பீச்சுக்கு கடலோர பகுதி வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் சாலை அமைத்தால் சுற்றுலா பயணிகள் இரண்டு சுற்றுலா பகுதிகளையும் பார்வையிட்டு கடலில் குளித்து தங்களது பொழுதுபோக்கை போக்குவதற்கு வசதியாக இருக்கும்.
ஆதலால் அரியமான் பீச்சையும், பிரப்பன்வலசை பீச்சையும் இணைக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கேற்ப கடலோரப் பகுதி அருகே குறுக்கு சாலை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.