திருப்பூர், ஏப்.25: திருப்பூர் தாராபுரம் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு உதவியாக உறவினர்களும் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் அவர்கள் காத்திருப்பதற்காகவும், தங்குவதற்காகவும் மருத்துவமனையில் 3 இடங்களில் காத்திருப்போர் வரை அமைக்கப்பட்டுள்ளது. தாய் சேய் நல பிரிவின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்போர் அறை இரும்பு மேற்கூரைகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவர் எதுவும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால் கோடை வெயிலின் தாக்கம் முழுவதும் காத்திருப்போர் அறைக்குள் பிரதிபலிக்கிறது.
மின்விசிறி உள்ளிட்ட எந்த வசதிகளும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, பகல் வேளையில் அங்கு காத்திருப்போர் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, புதிதாக அமைக்கப்பட்ட காத்திருப்போர் அறையை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைப்பது மட்டுமல்லாது மின்விசிறி வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.