கூடலூர், மே 5: கூடலூர் ஒன்றியம் ஓவேலி பேரூராட்சி தர்மகிரி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜோபி என்பவரது ஆட்டோ இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக இங்கு உள்ள இரு தரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் ஓவேலி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் (காங்கிரஸ்) ஷாஜி (55), அவரது சகோதரர் சைஜீ (49), மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த சிபு (41), சிஜோ (36) ஆகிய 4 பேரும் தாக்கி கொண்டதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த சிஜோ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிஜோவை, கவுன்சிலர் சாஜி மற்றும் அவரது தம்பி சைஜீ ஆகியோர் தாக்கியதாக தெரிகிறது. சம்பவம் தொடர்பாக சிஜோ அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து விசாரணை செய்த ஓவேலி காவல் நிலைய போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.