கண்டாச்சிபுரம், ஜூன் 7: புதுவை மாநிலம் குருமாம்பேட்டையை சேர்ந்தவர் முருகானந்தம்(55). இவர் தனது சரக்கு வேனை ஓட்டிகொண்டு நேற்று அதிகாலை புதுவையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வழியாக சென்று கொண்டிருந்தார். அதே சமயம் திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து, பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அடுக்கம் வளைவு பகுதியில் வந்தபோது சரக்கு வேனும், அரசு பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோரவிபத்தில் அரசு பேருந்தின் முன்புறம் மோதியதில் சரக்கு வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் இடிபாடுகளில் சிக்கி கிடந்தது.
மேலும் இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணித்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு அருகில் உள்ள கண்டாச்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தகவலறிந்து வந்த கண்டாச்சிபுரம் போலீசார் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ஜேசிபி வாகனத்தை வரவழைத்து வாகனத்தில் சிக்கிகொண்ட டிரைவர் முருகானந்தத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.