ஓசூர், நவ.9: ஓசூர் அருகே பாத்தாகோட்டாவிலிருந்து ஓசூர் நோக்கி, நேற்று டவுன் பஸ் ஒன்று வந்தது. பஸ்சில் டிரைவராக கிருஷ்ணகிரியை சேர்ந்த தங்கராஜ்(59), கண்டக்டராக ஆசைத்தம்பி இருந்தனர். செல்லும் வழியில், ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நின்று, ஒரு பயணியை இறக்கி விட்டு மீண்டும் புறப்பட தயாரானது. அப்போது, ஒரு வாலிபர் ஓடி வந்து பஸ்சில் ஏற முயன்றதாகவும், ஆனால் பஸ் நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கையில் இருந்த இளநீரை எடுத்து பஸ் மீது வீசினார். மேலும், இளநீர் கடையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து டிரைவர் மீது வீசினார்.இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த ஓசூர் டவுன் போலீசார், அங்கு சென்று டிரைவரை தாக்கிய ஓசூர் ஆர்.கே.ஹட்கோ பகுதியை சேர்ந்த ஆசம்(28) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.