பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி), அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர் காலிப்பணியிடங்களில் 2 விழுக்காடு பணியிடங்களை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர் பணிக்கு தகுதிபடைத்த பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் நியமனம் வழங்கிட ஆணை பெறப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கான பணியிடங்களை நிறைவு செய்யும்போது சிறப்பு, பொது விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படவேண்டும். வெளியிடப்பட்டுள்ள நிர்வாக ஆணைகளின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளது.
இதையடுத்து அமைச்சுப்பணியாளர்களுக்கு 2014-2015 முதல் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான பணிமாறுதல் ஆணைகள் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து விதிதிருத்தம் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியதையடுத்து, அரசாணையின்படி விதிதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது. 2017ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை விட பணிநிரவல் செய்யப்படவேண்டிய உபரி ஆசிரியர்கள் அதிகமாக இருந்ததால், அனைத்து பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் செய்வதற்கே போதுமானதாக இல்லை. அதனால் அனைத்து காலிப்பணியிடங்களும் (ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான 2 விழுக்காடு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் உட்பட) பணிநிரவலில் பூர்த்தி செய்யப்பட்டதால் உத்தேச காலிப்பணியிட மதிப்பீடு தயாரிக்க வேண்டிய நிலையே ஏற்படவில்லை.