Sunday, May 18, 2025
Home மாவட்டம்ஈரோடு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதிய நோட்டு புத்தகம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதிய நோட்டு புத்தகம்

by Neethimaan

ஈரோடு, ஏப். 24: ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் 80 சதவீதம் வந்துள்ளது. 100 சதவீதம் வந்ததும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ளது. அதேபோல், 1-5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு கடந்த 17ம் தேதியுடன் நிறைவடைந்து, கோடை விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து, 6-9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்றுடன்(24ம் தேதி) முழு ஆண்டு தேர்வு நிறைவு செய்யப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இதையடுத்து அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் இலவசமாக சமச்சீர் பாடபுத்தகங்கள் வழங்கப்படும்.  அதன்படி, 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கான முதல் பருவ பாட புத்தகங்கள், நோட்டுகள் 80 சதவீதம் வந்துள்ளது. அதனை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் சரிபார்த்து, அந்தந்த புத்தக காப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து புதிய பாட புத்தகங்கள் 80 சதவீதமும், நோட்டுகள் 30 சதவீதம் வந்துள்ளது.

இதில், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள ரயில்வே காலனி மேல்நிலை பள்ளியில் உள்ள புத்தக காப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. பாடப்புத்தகமும், நோட்டுகளுக்கும் 100 சதவீதம் வந்தபின், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும். மேலும், சீருடை, கல்வி உபகரணங்களும் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi