சிவகங்கை, அக். 21: அகவிலைப்படியை அறிவித்து, அதை ஜுலை.1முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாட்டில் முக்கிய நகரங்களின் விலைவாசி புள்ளி உயர்வு அடிப்படையில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிப்பது வழக்கம்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அதே தேதியில் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும். கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி அகவிலைப்படி காலம் தாழ்த்தி வழங்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டங்களுக்குப்பின் ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறதோ அதே தேதியில் தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கடந்த மே மாதம் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே தமிழ்நாடு அரசு தற்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ள 4சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.