வேலூர், அக்.19: காட்பாடி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 5 சவரன் நகைகளை திருடிச் சென்ற ஆசாமியை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் வீராசாமி(64), ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரது ஒரே மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இதனால் வீராசாமி பாலாஜி நகரில் உள்ள வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாலை மகளை பார்த்து வருவதற்காக கணவனும், மனைவியும் சென்னைக்கு சென்றனர்.
மீண்டும் நேற்று முன்தினம் மதியம் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வீராசாமி, வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக வீராசாமி கொடுத்த புகாரின்பேரில் காட்பாடி இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஆசாமி ஒருவர், வீராசாமி வீட்டின் அருகில் செல்வது பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இப்பதிவுகளை வைத்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.