புதுக்கோட்டை, ஏப்.14: அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழியை அரசு அதிகாரிகள் ஏற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் சமத்துவ நாள் உறுதிமொழியை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும் நேற்று ஏற்று கொண்டனர். சமத்துவ நாள் உறுதிமொழியான, ‘சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அம்பேத்கர்.
அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.\” என்ற உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.