அரவக்குறிச்சி, மே11: கொத்தப்பாளையம் அமராவதி ஆறு தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையம் அமராவதி ஆறு தடுப்பணையில் தண்ணீர் வந்ததும் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரை ரசிக்கவும், அணையில் குளிக்கவும் ஆண், பெண், சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆர்வக்கோளாறு காரணமாக இதில் குளிப்பவர்களில் சிலர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்து விடுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் தடுப்பணையில் தண்ணீர் வடிந்தோடும்போது பெரும்பாலும் ஒரு சில உயிரிழப்பாவது ஏற்பட்டு விடுகிறது. இதில் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர். எனவே அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் குளிக்க வருபவர்கள் உயிரிழப்பு ஏற்படுவதால், இதனை தடுக்க வருகின்ற மழைக்காலத்திற்குள் பொதுமக்களின் நலன் கருதி விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை வைக்க அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.