ராஜபாளையம், ஏப். 22: ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வரும் 20ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற உள்ள போராட்டம் குறித்த ஆலோசனை மற்றும் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து வரும் மே 20ம் தேதி தேசிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டம் குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பது, அதிக அளவில் வரிவிதித்து இந்திய மக்களின் உழைப்பை சுரண்டுவது, தமிழக வஞ்சிப்பது உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசின் விரோத கொள்கைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வது, போராட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது, ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியினரை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.