Sunday, May 18, 2025
Home மாவட்டம்புதுக்கோட்டை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்

அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்

by Neethimaan

பொன்னமராவதி, ஏப். 17: அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொன்னமராவதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். பொன்னமராவதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். பொன்னமராவதி தாலுகாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டப்பணிகளை, மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்துத்துறை அரசு உயர்அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

பொன்னமராவதி அருகே சித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்தும் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவிடும் பணி குறித்தும், காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் தாய்மார்களிடம் சிகிச்சை முறைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், காரையூர் கால்நடை மருந்தகத்தில், மருந்துகளின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்தும், காரையூர் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில், வருகைப் பதிவேட்டினையும்,

காரையூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாடுகள் குறித்தும், காரையூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், மாணவர்களின் வருகைப் பதிவேட்டினையும், காரையூர் கூட்டுறவு நியாயவிலைக்கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்தும், செம்பூதி கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், வேளாண் அடுக்கக திட்டத்தின்கீழ், விவசாயிகள் தங்களதுநில உடைமை விவரங்களை பதிவு செய்யும் பணி குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், பொதுமக்களுக்குத் தேவையான அரசு நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகள் விரைவாக சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறைகள் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளும் மற்றும் வெப்பம் தணிப்போம் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. எனவே தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் சேவைகளை எளிதாகவும்,விரைவாகவும் பொதுமக்கள் பெற்று பயனடையும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அருணா பேசினார். தொடர்ந்து ஊராட்சிகள் தோறும் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் 42 கிராம ஊராட்சி பகுதிகளின் குறைகள் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தெரிவத்தனர். இதனை நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அக்பர்அலி, தனித்துணை ஆட்சியர் ஷோபா, இணை இயக்குநர் (வேளாண்மை) சங்கரலட்சுமி, புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் ராம்கணேஷ், உதவி இயக்குநர் (நில அளவைத் துறை) அப்துல் ஜாகிர் உசேன், பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா, பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi