கிருஷ்ணகிரி, ஜூன் 18: கோரிக்கைகளை வலியுறுத்தி, திம்மாபுரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி வட்டார அலுவலகத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவி மஞ்சுளா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது 8 ஆண்டுகளாக புதிய மொபைல் போன் வழங்காத மாவட்டங்களுக்கு, உடனே மொபைல் போன் வழங்க வேண்டும்.
டி.எச்.ஆர்., மற்றும் எப்.ஆர்.எஸ்., மூலம் போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும். கடந்த 1993ம் ஆண்டு பதவி உயர்வுக்கு தீர்வு கிடைத்த பின்பும், இன்று வரை பதவி உயர்வு வழங்கவில்லை. எனவே உடனே பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், ஒன்றிய தலைவர் குப்பு, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜகதா, இளவரசி, ஒன்றிய செயலாளர்கள் செண்பகவள்ளி, மாதம்மாள், செல்வி, பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.