ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை கண்டவுடன் வெட்டிக் கொல்ல வேண்டும் என கிராம மக்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள். காரணம் இரவில் அவர்கள் நடமாடும்போது குரைக்கிறதாம். மேற்கு வங்கத்தில் அதிரடிப்படை முகாம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்களை ஒழிக்க போலீஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்கள் இணைந்து Ôகிரீன் ஹன்ட்Õ என்ற பெயரில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள். கிராமங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள். இரவில் மாவோ தீவிரவாதிகள் நடமாட்டத்தின்போது, தெரு நாய்கள் குரைத்து அவர்களை காட்டிக் கொடுத்து விடுகிறதாம். அதனால் எந்தக் கிராமத்திலும் நாய்களே இருக்கக் கூடாது என முடிவு செய்து விட்டார்கள் தீ.வாதிகள். இதையடுத்துத்தான் கொலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவும் மாவோ தீவிரவாதிகளுக்கு எதிராக கிராமம்தோறும் உருவாக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு கமிட்டியும் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன. நாய்கள் என்ன பாவம் செய்தன? அவற்றை ஏன் கொல்ல வேண்டும்? உங்கள் சண்டையில் நாய்களை ஏன் இழுக்கிறீர்கள்? தயவு செய்து அவற்றை விட்டுவிடுங்கள் என பீட்டா அமைப்பும் கெஞ்சிப் பார்த்துவிட்டது. ஆனாலும் மாவோ தீவிரவாதிகள் தங்கள் உத்தரவை வாபஸ் பெறவில்லை. இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட், மேற்கு வங்க கிராமங்களில் கொத்துக் கொத்தாய் நாய்களின் சடலங்கள் இறைந்து கிடந்துள்ளன. கழுத்து வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் அவை இறந்து கிடந்தது விலங்கு ஆர்வலர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் சில கிராமங்களில் பல நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தன. பிள்ளை போல் வளர்த்து வந்த நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள். கிராம மக்களுக்கு ஒரு பக்கம் தீவிரவாதிகளால் பிரச்னை. மறு பக்கம் அதிரடிப் படையினரின் விசாரணை தொல்லை. இவை போதாதென்று, நாய்கள் படுகொலை என்ற புதிய பிரச்னையும் சேர்ந்திருக்கிறது.




