அரியூர் சர்க்கரை ஆலை பிரச்னை புதுச்சேரியில்
பதிவு செய்த நாள்
11/20/2009 4:07:49 AM
சென்னை: அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் நஷ்டத்தில் இயங்கிய அரியூர் தனியார் சர்க்கரை ஆலையை இன்னொரு தனியார் நிறுவனம் வாங்கிய போது, ஆலையின் வங்கி கடன் போக, மீதமுள்ள தொகை தொழிலாளர்களுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் அளிக்கப் பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டுக்கு மேலாகியும், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.
புதிய நிர்வாகம், ஆலையின் 375 தொழிலாளர்களில் 200க்கும் மேற்பட்டவர்களை நீக்கியதோடு ஆலையை இயக்காமல் வைத்திருக்கின்றனர்.
இதனால், இந்த ஆலைக்கு வழங்க வேண்டிய கரும்பை அண்டை மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு தரவேண்டிய கட்டாயத்துக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உரிய கரும்பை தனியார் நிறுவனத்துக்கு அனுப்ப புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு அனுமதித்துள்ளதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரி அரசு, அரியூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், கரும்புக்கு ரூ.2,000 வழங்க வலியுறுத்தியும், 20ம் தேதி காலை 10 மணிக்கு, அரியூர் சர்க்கரை ஆலை முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கு விவசாய பிரிவு செயலாளர் துரை கோவிந்தராஜன் தலைமை வகிக்கிறார்.