கோவை: கோவை வடவள்ளியில் வெவ்வேறு பாடப்பிரிவில், 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர். கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை பிள்ளைகள் உள்ளனர். இருவரும் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதினர். சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவில் நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய 2 பேரும் 600க்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்தனர்.
சிறு வயதில் இருந்தே பல விஷயங்களில் ஒற்றுமையாக இருக்கும் இவர்கள் பொதுத்தேர்விலும் ஒரே மதிப்பெண் எடுத்து அதிலும் ஒற்றுமையை காட்டியுள்ளனர். நிரஞ்சன் கம்ப்யூட்டர் சயின்ஸ், நிவேதா பிசினஸ் மேத்ஸ் என இருவரும் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் படித்தாலும், வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுத சென்றாலும் இறுதியாக அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் ஒரே மாதிரியாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யார் பெரியவர்? யார் திறமைசாலி? என்ற போட்டிக்கு இடமில்லாமல் இருவரும் சமம் என்பதை அவர்களது மதிப்பெண் காட்டுவதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.