‘‘யுவனை ரெடி பண்ணு சுசி... புது சட்டப்பேரவை கட்டிடத்தை பார்த்துட்டு வரலாம்...’’ பீட்டர் மாமா சொன்னார். ‘‘திறப்பு விழாவுக்கு வந்த பிரதமரும் சோனியாவும் முதல்வரை பிரமாதமா பாராட்டிட்டாங்க... முதல்வருக்கு சந்தோஷமா?’’ யுவனை பிடித்த படியே சுசி மாமி கேட்டாள். ‘‘விழா சிறப்பா முடிஞ்சதுல அவருக்கு முழு திருப்தியாம்... சீனியர் அமைச்சர்களை கூப்பிட்டு, ‘எப்படியா இருந்துச்சு’ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாராம்...’’ ‘‘இருக்காதா பின்னே... அவரே வீடு கட்டினா கூட இத்தனை முறை போய் பார்த்திருக்க மாட்டார். அரசு கட்டிடம் தானேன்னு சும்மா இருக்காம பல முறை போய் வேலைகள் நடக்குறத பார்த்திருக்கார்... சோனியாவே அதை பேச்சில் குறிப்பிட்டதுதான் எல்லோருக்கும் ஆச்சரியம்... அவருக்கு எப்படி தெரியும்... ஐ.பி. தகவல் கொடுத்துச்சா...?’’ ‘‘பிரதமர் வருகைக்காக காத்திருந்த சில நிமிடங்களில் தலைமை செயலாளர் ஸ்ரீபதி இந்த விபரத்தை சோனியாவிடம் சொன்னாராம்... ஆச்சரியமா கேட்ட அவர், அதை அப்படியே மேடையில பேசி அசத்திட்டாங்க...’’ பீட்டர் மாமா சொன்னார். ‘‘பென்னாகரம் தேர்தல் பத்தி ஏதாவது தகவல் இருக்கா...’’ சுசி மாமி அடுத்த மேட்டருக்கு போனாள். ‘‘அந்த தொகுதியில மூணு பெண்கள் கலக்குறாங்களாம்...’’ ‘‘ஒரு பெண்கூட போட்டி போடாதப்ப மூணு பெண்ணுங்க கலக்குறாங்கன்னு சொல்றேளே...’’ சுசி மாமி கேட்டாள். ‘‘கலெக்டர், டிஆர்ஓ., ஆர்டிஓன்னு இந்த மூணு பேரும் பெண்கள்... தேர்தலை இவங்கதான் நடத்துறாங்க... ஆளும் கட்சி, எதிர்கட்சின்னு பாகுபாடு இல்லாம எந்த கட்சியில இருந்து புகார் வந்தாலும் சம்பவ இடத்துக்கு போயிடுறாங்களாம்... யாரும் எந்த குறையும் சொல்லிடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்காங்களாம்...’’ பீட்டர் மாமா சொன்னார். ‘‘அதிருக்கட்டும் தேமுதிக இன்னும் வேலையை ஆரம்பிக்கலன்னு சொன்னீங்களே... இப்ப எப்படி இருக்கு...’’ ‘‘கடந்த எம்.பி. தேர்தல்ல அதிக ஓட்டுக்கள் வாங்கின தொகுதியில பென்னாகரமும் ஒன்று. பதினைந்து பூத்துக்கள்ல மத்த கட்சிகளை விடவும் அதிகமா ஓட்டு வாங்கியிருக்காம்... அதோடு தேர்தலுக்கு பிறகு தொகுதியில இருந்த நிர்வாகிகள் யாரும் கட்சியில இருந்து வெளியேறலையாம்.. அதனால அந்த ஓட்டுக்களை தக்க வைச்சா போதும்னு நினைக்கிறாங்களாம்... கேப்டன் ஐந்து நாளும், அவர் மனைவி ரெண்டு நாளும் பிரசாரம் செய்ய போறாங்களாம்...’’ ‘‘ரகசிய கூட்டம் போடுறாங்களாமே...’’ சுசி மாமி கேட்டாள். ‘‘தமிழக பாரதிய ஜனதா விவகாரத்தை கேட்கிறியா... தேசிய கமிட்டியில இருந்து முக்கிய பிரமுகர் வரப் போறாராம்... அவர் தலைமையில மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டம் ரகசியமா நடக்க போகுதாம்... அந்த கூட்டத்துலதான் கட்சியை வலுப்படுத்துறது பத்தியும் கூட்டணி பத்தியும் தீவிரமா விவாதிக்க போறாங்களாம்...’’ ‘‘சுவாமி நித்தியானந்தா கடைசியில உண்மையை ஒப்புக்கிட்டாரே...’’ ‘‘வேற வழி இல்ல, சுசி... அவர் தரப்புல இருந்து நடிகையோட தொடர்ந்து பேசிக்கிட்டு இருக்காங்களாம்... பேரம் முடிஞ்சிடுச்சாம்... அநேகமா இந்த விவகாரம் அடங்குற வரைக்கும் நடிகையை வெளிநாட்டுல பாதுகாப்பா தங்க வைக்க போறாராம்... நடிகை புகார் கொடுத்தால்தானே சுவாமிக்கு நெருக்கடி வரும்... அதான் இந்த ஏற்பாடாம்...’’ என்றார், பீட்டர் மாமா. ‘‘கொஞ்சம் இருங்க யுவனை ரெடி பண்ணிடுறேன்’’ என்று சொன்ன படியே மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார், சுசி மாமி. ன்




