கவுன்சிலர்கள் போராட்டம் காமெடியில முடிஞ்சுடுத்து
பதிவு செய்த நாள்
03.09.2010
ஊரிலிருந்து வந்திருந்த உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார் பீட்டர் மாமா. பள்ளியில் இருந்து திரும்பிய யுவனை கண்டதும், அன்போடு அழைத்து படிப்பை பற்றி விசாரித்தார் உறவினர். யூனிபார்மை மாற்றி விட்டு வருவதாக யுவன் உள்ளே சென்றதும், ‘‘ஸ்கூல் பீஸ் விவகாரம் எந்த நிலையில இருக்கு பீட்டர்... நீதிபதி குழு பரிந்துரை ஒழுங்கா அமலுக்கு வந்திருக்கா...’’ என்று கேட்டார் உறவினர்.
“ஸ்கூல் பீஸ் பிரச்னையெல்லாம் ஐகோர்ட்டுல விசாரணையில இருக்கு... இன்ஜினியரிங் கல்லூரிகள்தான் இஷ்டம¢ போல பீஸ் வாங்குறாங்களாம்... அரசு என்னதான் உத்தரவிட்டாலும் கண்டுக்கலையாம்... கோர்ட்டுக்கு போகவும் ரெடியாயிட்டு வர்றாங்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘காங்கிரஸ் போஸ்டர் யுத்தம் முடிவுக்கு வந்துட்டதா...’’ என்று தொடர்ந்தார் உறவினர்.
“கோஷ்டி சண்டை ஒண்ணும் காங்கிரசுக்கு புதுசில்லையே... இந்த தடவை ஓவராயிட்டுதாம்... வழக்கமா பேட்டி கொடுப்பாங்க... மேடை போட்டு பேசுவாங்க... இந்த தடவை சொந்த செலவுலேயே போஸ்டர் ஒட்டியிருக்காங்க... லேட்டஸ்ட்டா அவங்களுக்குள் சமரசம் ஆயிருச்சுன்னு தகவல்... நல்லது நடந்தா சரிதான்...’’ என்று பீட்டர் மாமா சொன்னார்.
அப்போது கையில் காபி டம்ளருடன் வந்த சுசிலா மாமி, ‘‘ஏடியெம்கே கவுன்சிலர்கள் போராட்டம் காமெடியில முடிஞ்சுடுத்து தெரியுமோ...’’ என்று அடுத்த மேட்டரை சொன்னாள்.
‘‘எந்த ஊர்ல சுசீ...?’’ என்று உறவினர் ஆர்வத்தோடு கேட்டார். ‘‘சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஏடியெம்கே கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா... ஒரு உறுப்பினரை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை வெச்சாளாம்... மன்றத்தை விட்டு வெளியே வராம உள்ளிருப்பு போராட்டம் நடத்தினாளாம்... இரவு அங்கயே சாப்பாடு... 10 மணிக்கு போலீசார் வந்து, கவுன்சிலர்களுக்கு கவுன்சலிங் கொடுத்துருக்கா... உடனே வாபஸ் வாங்கிட்டா போராட்டத்தை...’’ என்று நடந்த கூத்தை விவரித்தாள் சுசி மாமி.
‘‘தர்மபுரி நகராட்சியில ஏதோ கமிஷன் பிரச்னையாமே... எதுலயோ படிச்ச ஞாபகம்...’’ என்று உறவினர் பேச்சை தொடர்ந்தார்.
‘‘கவுன்சிலர்கள் கான்ட்ராக்ட் எடுக்க கூடாதாம்... அப்படி எடுத்தாலும் மற்றவாளுக்கு உரிய பங்கை கொடுத்துட்டா பிரச்னை கிளப்ப மாட்டா... அந்த ஊர்ல கமிஷன் கொடுக்கறதே கிடையாதாம்... அதனால கான்ட்ராக்ட் எடுக்கற கவுன்சிலர்களுக்கு எதிரா பிரச்னையை கிளப்பறதா சொல்றா... இந்த பிரச்னையில இதுவரை 3 பேர் பதவி காலி... இன்னும் சிலரை வீட்டுக்கு அனுப்ப முயற்சி நடக்கறதாம்... யாரு தலை உருள போறதோ...’’ என்று விவரித்தாள் சுசி மாமி.
‘‘சேலத்துல ஒரு சங்கதி... கல்வி அதிகாரியை மிரட்டியே காரியம் சாதிக்கறாங்களாம்...’’ என்று பீட்டர் மாமா அடுத்த விஷயத்தை சொன்னார்.
‘‘விஷயம் என்னானு சொல்லுங்கோ... நிறைய வேலை இருக்கு...’’ என்று சுசி மாமி சொன்னாள். ‘‘மலைப்பகுதி அரசு பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் பணியில் ஆசிரியர் நியமிப்பாங்களாம்... ஒரு வருடம் கண்டிப்பா வேலை செய்யணுமாம்... அதனால ஜூனியரா பாத்து தான் அனுப்புவாங்களாம்... ஆனா, ஆசிரியர் யூனியன் மிரட்டலுக்கு பயந்து சீனியர் ஒருவரை நாகம்பதி மலை பள்ளியில போட்டிருக்காங்க... அந்த யூனியன் நிர்வாகியை கண்டாலே கல்வி அதிகாரி பயப்படறாராம்... காரணம் அதிகாரிக்கு ப்ரமோஷன் நேரம்... இந்த நேரத்தல பிரச்னை எதுக்குன்னு நடவடிக்கை எடுக்க பயப்படுறாராம்...’’ என்று பீட்டர் மாமா சொல்லி முடித்ததும், காலி டம்ளரை கையில் எடுத்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் சுசி மாமி.