கசப்பு மருந்து
பதிவு செய்த நாள்
3/16/2010 12:32:35 AM
அந்த டாக்டர்ட்ட கல்சல்டிங் பீஸ் கம்மிதான். ஆனா, சாதாரண காய்ச்சல், சளிக்கே 200 ரூபாய்க்கு மாத்திரை, மருந்து எழுதிக் கொடுப்பாரு... இப்படி நமக்கு தெரிந்த யாராவது ஒருவர் பேசி கேட்டிருப்போம். எதற்கு இவ்வளவு மாத்திரைகள் என்ற கேள்வி எழும். காரணம் இருக்கிறது. மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் தரும் அன்பளிப்பு. இனி அன்பளிப்பு வாங்கினால் டாக்டர் தொழிலே பார்க்க முடியாத அளவுக்கு கடுமையான விதிகள் தயாராகி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு போயிருக்கிறது.
உலகம் முழுவதும் இந்த கெட்ட பழக்கம் இருக்கிறது. டாக்டர்களுக்கு பணம், சுற்றுலா, பரிசுகள் வாரி வழங்குகின்றன மருந்து நிறுவனங்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஹாங்காங், ஸ்விட்சர்லாந்து சுற்றுலா என்றால், இந்தியாவில் குலு மணாலி, கோவா பயணம் என தாராளமாக செலவிடுகின்றன. மருத்துவ கருத்தரங்கு என்ற பெயரில் குடும்பத்தோடு வெளிநாட்டு பயணம் ஏற்பாடு செய்கின்றன. இதற்கெல்லாம் ஆகும் செலவுகளை மருந்து, மாத்திரைகளின் விலையில் ஏற்றி விடுகின்றன. ஏறக்குறைய தங்களுடைய தொழில் பார்ட்னர்களை போல் டாக்டர்களை கவனிக்கின்றன. அதற்கு வேட்டு வைக்கிறது புதிய சட்டம்.
மருந்து நிறுவனங்களிடம் அன்பளிப்புகள் பெறும் டாக்டர்களுக்கு அபராதம் விதிப்பது நடைமுறைக்கு சரிப்படாது என்பதால், அதைவிட கடுமையான தண்டனையாக அவர்களின் தொழிலுக்கே தடை விதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்படுகிறது. ஆயிரம் ரூபாயில் இருந்து ஐயாயிரம் வரை மதிப்புள்ள அன்பளிப்பு பெறும் டாக்டர்களுக்கு எச்சரிக்கை மட்டும். அதற்கு மேல் பத்தாயிரம் வரை அன்பளிப்பு வாங்கினால் மூன்று மாதம் டாக்டர் தொழில் செய்ய முடியாமல் தடை விதிக்கப்படும். ஐம்பதாயிரம் வரை மதிப்புள்ள பரிசு என்றால் ஆறு மாதம் தொழில் நடத்த முடியாது. லட்சத்துக்கு மேல் போனால் ஓராண்டு டாக்டர் தொழிலுக்கு தடை.
இந்தியாவில் டாக்டர்கள் குறைவு. மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இன்னும் தேவை. இருப்பவர்களும் அத்துமீறி நடந்து, தொழில் செய்ய முடியாமல் போனால் நோயாளிகளின் நிலைமை திண்டாட்டமாகும். மருந்து கம்பெனியுடன், கடையுடன் எந்த தொடர்பும் எனக்கு கிடையாது என்று பகிரங்கமாக போர்டு எழுதி வைக்க தொடங்கிவிட்டனராம் மனசாட்சியுள்ள டாக்டர்கள்.