2 லட்சம் டன் அரிசி இறக்குமதி
பதிவு செய்த நாள்
11/19/2009 10:27:38 AM
புதுடெல்லி : பற்றாக்குறையை சமாளிக்க அரிசி இறக்குமதி செய்ய அரசு
திட்டமிட்டு உள்ளது. விலைவாசி உயர்வு, உணவு தானிய கையிருப்பு ஆகியவை பற்றி
விவாதிப்பதற்காக டெல்லியில் அடுத்த 2 நாட்களில் மாநில அமைச்சர்களின்
கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப்
முகர்ஜி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
பல்வேறு மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் அதிக மழை காரணமாக அடுத்த
காரிப் பருவத்தில் நெல் உற்பத்தி கணிசமாக குறையும் என்று மத்திய அரசு
கருதுகிறது. இந்த நிலைமையை சமாளிக்க மத்திய அரசிடம் உணவு தானிய கையிருப்பு
தாராளமாகவே உள்ளது. 60 லட்சம் டன் அரிசி கையிருப்பு இருக்கிறது.
இருந்தாலும், விலையை சீராக வைக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து கையிருப்பு வைக்க மத்திய
அரசு திட்டமிட்டு உள்ளது. எவ்வளவு அரிசி, எப்போது இறக்குமதி செய்யப்படும்
என்பதை இப்போது கூற இயலாது’’ என்றார்.
பல்வேறு மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் அதிக மழை காரணமாக 2009 &
2010 காரிப் பருவத்தில் ஒன்றரை கோடி டன் அரிசி பற்றாக்குறை ஏற்படக் கூடும்
என்று மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. இதை சமாளிக்க, தாய்லாந்து உள்ளிட்ட
நாடுகளில் இருந்து 2 லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்யப்படக் கூடும் என்று
கருதப்படுகிறது.