சிறையில் அமித் ஷாவிடம் 2வது நாளாக விசாரணை
பதிவு செய்த நாள்
7/30/2010 12:25:24 AM
அகமதாபாத் : போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவிடம், சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.
தாதா சொராபுதீன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அமித் ஷாவை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சபர்மதி சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரிடம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி நேற்றுமுன்தினம் அமித் ஷாவிடம் 4 மணி நேரம் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
இரண்டாவது நாளாக நேற்றும் அமித் ஷாவிடம் விசாரணை தொடர்ந்தது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘‘விசாரணைக்கு அமித் ஷா முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று நீதிமன்றத்தில் அவரது சார்பில் வக்கீல்கள் தெரிவித்தனர். ஆனால், என்கவுன்டர் தொடர்பான கேள்விகளுக்கு அவர் சரியான பதில் அளிக்காமல் மவுனம் சாதிக்கிறார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’’ என்று தெரிவித்தனர்.
விசாரணை முழுவதும் ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அமித் ஷாவிடம் 30ம் தேதி வரை விசாரிக்க அனுமதி உள்ளதால், இன்றும் விசாரணை தொடர உள்ளது. இதற்கிடையில், சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை சிபிஐ விசாரித்து 6 மாதங்களில் அறிக்கை அளிக்க கடந்த ஜனவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஜூலை 31ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நாளை 31ம் தேதி என்பதால், கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.ஐ. விசாரணையில் காங்கிரஸ் தலையீடு இல்லை
காங்கிரஸ் மூத்த தலைவரும் குஜராத் ஒருங்கிணைப்பாளருமான ராஜீவ் சுக்லா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. எல்லா விஷயங்களையும் சி.பி.ஐ.யிடம் விட்டுவிட வேண்டும். இதில் காங்கிரஸ் தலையீடு எதுவும் இல்லை. காங்கிரஸ் விருப்பம் போல் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது என்று கூறுவது தவறு. அதில் உண்மையில்லை’’ என்றார்.
‘குஜராத் உள்துறை அமைச்சர் என்ற முறையில், முதல்வர் நரேந்திர மோடியிடம் சி.பி.ஐ. விசாரிக்குமா?’ என்ற நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘என்கவுன்டர் விவகாரத்தில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும்’’ என்று சுக்லா கூறினார்.