விரோதி வருடம் கார்த்திகை மாதம் 29-ந் தேதி செவ்வாய்க்கிழமை (15.12.2009) அமாவாசை திதி, கேட்டை நட்சத்திரம், சூலம் நாம யோகம், நாகவம் நாம கரணம், நேத்திரம், ஜீவனில்லாத சித்த யோகத்தில் புதன் ஓரையில், பஞ்சபட்சியில் கோழி துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய உதயம் புக இரவு மணி 11.07க்கு மகரத்திலிருந்து ஸ்திர வீடான கும்பத்திற்குள் குரு பகவான் நுழைகிறார். குரு பகவானின் திருவருள் இருந்தால் நாம் எதிலும் முதலிடத்தை பிடிக்க முடியும். சுதந்திரத்திற்காகவும் கிடைத்த சுதந்திரத்தை பேணிக்காப்பதற்காகவும் போராடிய கொடி காத்த குமரன் முதல் காஷ்மீர் கார்கில் போரில் தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்கள் வரை தேசப்பற்று உள்ளவர்களை உருவாக்குபவர் இந்த குரு பகவான்தான்.
ஓடி ஓடி உழைத்தும் ஒரு குண்டு மணித் தங்கம் கூட சேர்க்க முடியாமல் தவிப்பவர்களின் ஜாதகத்தில் இவர் பலவீனமாக இருப்பார். இவரின் அனுக்ரகம் இருந்தால் தங்கத்திலேயே புரளலாம். இந்த நவீன உலகத்தில் பெற்றெடுத்த குழந்தைக்குப்பால் புகட்ட மறக்கும் தாய்மார்கள் மத்தியில் எந்த பிரதிபலனும் பாராமல் தன் பாலால் குழந்தையின் உயிரைக் காக்கும் பசுவை ஆள்பவரும் இந்த குரு பகவான்தான்.
நான்கு வேதங்களிலும் பழுதில்லாமல் பாண்டித்தியம் பெற்றிருந்தும் சாதி, மத பாகுபாடு பார்க்காமல் மனித நேயத்துடன் எல்லோருக்கும் போதிக்கும் பூஜ்யாய போதகர்களின் மொத்த உருவமும் இவர்தான். ஐநூறு, அறுநூறு பக்கமுள்ள கோப்புகளாக இருந்தாலும் அதை அரைமணி நேரத்தில் படித்து ஐம்பது வரியில் அறிக்கை தயாரிப்பவரின் அறிவாற்றலில் நிறைந்திருப்பவரும் இவர்தான்.
அதிக பருமனாகவோ அல்லது ஒல்லியாகவோ இல்லாமல் உயரத்திற்கு தகுந்த எடையுடன் பார்ப்பதற்கு லட்சணமாக கருணைப் பார்வையால் நம்மை காந்தம் போல் இழுப்பவர்களெல்லாம் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்தான். கலசத்துடன் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள், அசைந்து செல்லும் ரதங்கள், ஆர்ப்பரிக்கும் வெண்குதிரைகளுக்கெல்லாம் அதிபதியும் இவர்தான். லஞ்சமே வாங்காமல் கடமையாற்றும் அரசு அதிகாரிகளெல்லாம் குரு பகவானின் சாயல்தான். கல்வி என்ற பெயரில் கரன்சிகளை வாரிக்குவிக்கும் போலிக் கல்வி நிறுவனர்களுக்கு மத்தியில் இலவசக்கல்வி தருபவர்களின் இதயத்தில் இருப்பவர் இந்த குருதான்.
பணத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கியும் இவர்தான். சுனாமி, வெள்ளம், நில நடுக்கம், தீ விபத்து, சாலை விபத்து மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்படுபவர்களை அந்த இடத்திற்கு உடனே ஓடிப்போய் உதவும் உள்ளங்களில் வாழ்பவரும் இந்த குரு பகவான்தான். வறுமையிலும் வார்த்தை தவறாமல் வாழ்பவர்களை இயக்குபவரும் இவர்தான்.
தனகாரகனான குருபகவான் இதுவரை தனது நீச்ச வீடான மகரத்தில் அமர்ந்திருந்து உலக அளவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தினார். தற்சமயம் பலவீனமாக இருந்த நச்ச வீட்டிலிருந்து விடுபட்டு வளைய வீடான கும்பத்தில் குரு அமர்வதால் கருப்புப் பணம் வெளியே வரும்; உலகெங்கும் பணப்புழக்கம் ஓரளவு அதிகரிக்கும். 4.5.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது சொந்த வீடான மீனத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் வேலை வாய்ப்பு பெருகும். மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகள் திறக்கப்படும். நிதி ஆதாரம் பெருகும். பங்குச்சந்தை கொஞ்சம் ஏறுமுகமாகும்.
தங்கம் விலை உயரும். நீதி, நேர்மையுள்ளவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். காவல் துறை, ராணுவம் நவீன மயமாகும். 4.5.2010 முதல் 6.11.2010 முடிய குருவும் சனியும் பார்த்துக்கொள்வதால் நீதிபதிகள் காவல்துறையையும் ஆள்பவர்-களையும் எச்சரிப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய வங்கிகள் தடுமாறி முன்னேறும். மிகப்பெரிய நிறுவனங்கள் பல, தங்கள் பங்குகளை நெருக்கடியால் விற்பனை செய்யும். பள்ளிகளில், கல்லூரிகளில் புதிய பாடத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும். இதனால் பாரம்பரிய கல்வி புறக்கணிக்கப்படும். கல்லூரி மாணவர்களிடையே அமைதி-யின்மையும் சண்டை குணமும் காணப்படும். ஆலயங்கள் புதுப்பிக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்-கும். கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். குரு பகவான் கன்னியையும் பார்ப்பதால் இளம் பெண்கள் சாதிப்பார்கள். பெரிய பதவிகளில் இளைஞர்கள் அமர்வார்கள்.
தைராய்டு, கேன்சர் நோய் அதிகரிக்கும். அதேசமயம் மருத்துவத் துறை வளரும். மருத்துவ ரீதியாக பிள்ளைப்பேறு பெறுவதும் அதிகமாகும். கிராமங்கள் வளர்ச்சியடையும். பருவமழை தவறி பெய்யும். எண்ணெய், பருப்பு வகைகளின் விளைச்சல் குறையும். 2010 மத்திய பகுதியிலிருந்து ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். பால் உற்பத்தி குறையும். ஆகமொத்தம் இந்த குரு மாற்றம் நிலையான புத்தியை தராமல் ஒருவித தடுமாற்றத்தையும், எதிலும் கலப்படத்தை-யும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
குரு பகவான் கும்பம், மீனம் என இருவீடுகளில் அடுத்த ஓராண்டிற்கு சஞ்சரிப்பதால் நாட்டை பிரிக்கும் சக்திகள் அதிகரிக்கும். எனவே மொழி, இனம், மதம் கடந்து நாட்டின் ஒற்றுமைக்காகவும், நலனுக்காகவும் தேசப்பற்றுடன் பாடுபடுவோம். இதன் மூலம் குருவின் அருள் நமக்கு கிட்டும்.
















