பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் சுற்று வட்டாரப்பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பிராய்லர் கோழிகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தற்போது நிலவும் கடும் வெயில் காரணமாக கோழிப்பண்ணைகளில் கோழி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாக பிராய்லர் கோழிகள் வெப்பம் தாங்கமால் இறந்து விடுவதால், 1000 கோழிகள் வளர்க்க வேண்டிய ஒரு கூடாரத்தில் 700 கோழிகளையே விலாசமாக வளர்க்கின்றனர். இதனால், கோழி உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.
பிராய்லர் குஞ்சுகளின் விலை, தீவனப் பொருட்களான மக்காச்சோளம், சோயா, மத்திக் கருவாடு போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும், உடலுக்கு சூடு என்பதால், கோடை காலத்தில் கோழிக்கறி சாப்பிடுவதை மக்கள் குறைத்து கொள்வார்கள். இந்த காரணங்களாலும், பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதற்கிடையே, பிராய்லர் கோழிகளின் பண்ணை கொள்முதல் விலை ரூ.69ஆக உயர்ந்துள்ளது. இதனாலும் பிராய்லர் விற்பனையில் மந்தமான நிலை ஏற்பட்டுள்ளது.





