மும்பை : அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி மும்பையில் தங்கி இருந்தபோது அவருடன் தொடர்பு வைத்திருந்த இந்தி நடிகைகள் கங்கனா ரனாட், ஆர்த்தி சாப்ரியா, தாரா சர்மா மற்றும் பாலிவுட் பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற தீவிரவாதி டேவிட் ஹெட்லி, அவரது கூட்டாளி தாவுர் ஹசன் ரானா ஆகியோர் அமெரிக்காவில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். லஷ்கர்&இ&தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இவர்கள் இருவரும் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முன்னும் பின்னும் பல முறை ஹெட்லியும் ரானாவும் இந்தியா வந்து சென்றுள்ளனர். மும்பையில் பிரபல இந்தி பட அதிபர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட் பயிற்சியாளராக வேலை பார்த்த உடற்பயிற்சி கூடத்துக்கு தீவிரவாதி ஹெட்லி வந்து சென்றுள்ளார். அப்போது, ராகுலுக்கும், அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. ஹெட்லி அமெரிக்காவில் சிக்கிய செய்திகள் வெளியானதும் அவருடன் தனக்கு உள்ள தொடர்பு குறித்து ராகுல் பட் போலீசிடம் கூறினார். பட உலகம் அதிர்ச்சி: இதையடுத்து, ராகுல் பட்டிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வெளியிட்ட தகவல்கள் இந்தி பட உலகை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. ஹெட்லியை நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகோடு தொடர்புடைய 15 முக்கிய புள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ராகுல் பட் கூறி உள்ளார். ராகுல் கூறிய பட்டியலில் நடிகைகள் கங்கனா ரனாட், ஆர்த்தி சாப்ரியா, தாரா சர்மா, நடிகர் கரன் கபூர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. விரைவில் விசாரணை:இதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலிவுட் முக்கிய புள்ளிகளுடன் நெருக்கமாக இருக்க ஹெட்லி முயன்றுள்ளார். இதற்காக, ராகுல் பட்டை ஒரு கருவியாக பயன்படுத்தி உள்ளார். ஒரு சிலரை ராகுலுடன் சென்று ஹெட்லி சந்தித்துள்ளார். மற்றவர்களிடம் தனியாக அவர் பேசியதும் தெரிய வந்துள்ளது. ஹெட்லியுடன் தொடர்பு வைத்திருந்த பாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரிடம் விரைவில் விசாரணை நடத்துவோம் என்றார்.



