திருவனந்தபுரம், : கொச்சியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக மத்தி ய உள்துறை எச்சரித்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்துக்குரிய 20 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கேரளாவில் துறைமுக நகரமான கொச்சியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் & இ & தொய்பா திட்டமிட்டு இருப்பதாகவும், அதை முறியடிக்க பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் கேரள அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை 2 தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கொச்சியில் கமாண்டோ வீரர்கள், போலீசார் உட்பட 2,200 பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
துறைமுகம், விமான நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், உயர் நீதிமன்றம், நட்சத்திர ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், பஸ், ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் எல்லா இடங்களிலும் கடந்த 2 நாட்களாக இரவுப் பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொச்சி நகரம் முழுவதும் ‘உஷார்நிலை’ பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொச்சிக்கு வரும் எல்லா வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு போலீஸ் நடத்திய சோதனையில் சந்தேகத்துக்குரிய 20 பேர் பிடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.




