திருவனந்தபுரம், : கேரளாவுக்கு சுற்றுலா வந்த கனடா நாட்டு பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்தது. கணவன் & மனைவிக்கு மட்டுமே விசா இருப்பதால், அவர்கள் குழந்தையுடன் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் டெரன்ஸ் ஷிரி (31). இவருடைய மனைவி மரியா அமேன் (21). இருவரும் கேரளாவை சுற்றிப் பார்க்க கடந்த மாதம் வந்தனர். மரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஒரு மாதம் சுற்றிப் பார்த்து விட்டு கனடா செல்ல திட்டமிட்டு இருந்த அவர்கள், கோவளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில், மரியாவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு ஓட்டல் ஊழியர்கள் ஓடி வந்தனர். ஆனால், டெரன்ஸ் யாரையும் அறைக்குள் அனுமதிக்கவில்லை. டாக்டரையும் அழைக்க வேண்டாம் என்று கூறி விட்டு, அறையை பூட்டிக் கொண்டார்.
பயந்து போன ஊழியர்கள் அறைக்கு வெளியே பதற்றத்துடன் நின்றனர். சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது தாயும், பெண் குழந்தையும் நலமாக இருந்தனர். டெரன்ஸ் தனது குழந்தைக்கு ‘ஜார்சியா கோவளம் ஷிரி’ என்று பெயர் சூட்டினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோவளம் போலீசார் விரைந்து வந்தனர். டெரன்சிடம் விசாரணை நடத்திய அவர்கள், குழந்தை பிறந்து இருப்பதால் கணவனும், மனைவியும் கனடா திரும்புவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர், போலீசார் டாக்டர்களை அழைத்து குழந்தைக்கும் தாய்க்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். டெரன்ஸ் கூறுகையில், ‘‘குழந்தை அடுத்த மாதம் பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். ஆனால், முன்கூட்டியே பிறந்து விட்டது. நவீன மருத்துவ உபகரணங்களை நான் நம்புவதில்லை. இயற்கை சார்ந்த வைத்தியத்தை நம்புகிறேன். அசைவம், வேக வைத்த உணவுகளை சாப்பிடுவதில்லை. தானியம், பழங்களை மட்டுமே சாப்பிடுகிறோம். என் மனைவிக்கு ஸ்கேன் கூட எடுத்து பார்த்தது கிடையாது’’ என்றார்.





