புதுடெல்லி, : மத்திய உள்துறை அமைச்சக ஊழியர்கள் நினைத்த நேரத்தில் அலுவலகத்துக்கு வரவும், செல்லவும் சலுகை அளிக்கப்பட உள்ளது. ஆனால் ஒரு நிபந்தனை! வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை செய்து விட வேண்டும்.டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாகி விட்டது. உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு ப. சிதம்பரம் எடுத்த நடவடிக்கைகளே இதற்கு காரணம். இதன் ஒரு கட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஊழியர்களுக்கு ‘பயோ&மெட்ரிக்’ வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊழியர்கள் காலையில் தாமதமாக வந்தாலோ அல்லது மாலையில் முன்கூட்டியே வீட்டுக்கு சென்றாலோ, இந்த ‘பயோ & மெட்ரிக்’ வருகை பதிவேடு கருவி, வேலை நேரத்தை குறைத்து சம்பளத்தை வெட்டி விடும்.
இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ப. சிதம்பரத்தின் கவனத்துக்கு உயர் அதிகாரிகள் இதை எடுத்துச் சென்றனர். மேலும், ஊழியர்களுக்கு புதிய சலுகை அளிக்கவும் பரிந்துரை செய்தனர். அதன்படி, ஊழியர்கள் காலை நேரத்தில் நினைத்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு தாமதமாக வரலாம் அல்லது மாலையில் நினைத்த நேரத்துக்கு முன்கூட்டியே செல்லலாம்.
ஆனால், இந்த சலுகையை அனுபவிக்க ஒரே ஒரு நிபந்தனையைதான் கடைபிடிக்க வேண்டும். வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை செய்து விட வேண்டும் என்பதுதான் அது. தாமதமாக வரும் நேரத்தையோ அல்லது முன்கூட்டியே செல்லும் நேரத்தையோ, அன்றைய தினமே கூடுதல் நேரம் வேலை செய்து சமன் செய்து கொள்ளலாம் அல்லது அந்த வாரத்துக்குள் சமன் செய்து விட வேண்டும். சிதம்பரத்துக்கு இந்த புதிய திட்டம் பிடித்து விட்டதால், விரைவில் அமல்படுத்துவதாக அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளார்.
.





