மின்வாரிய ஊழியர் கடத்தலா? பெண் ஏட்டுவிடம் விசாரணை
பதிவு செய்த நாள்
7/29/2010 12:34:15 AM
வேளச்சேரி : மாயமான மின்வாரிய ஊழியர் கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதில், பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வேளச்சேரி நேரு நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). பெருங்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக வேலை செய்கிறார். கடந்த மார்ச் மாதம் ராஜேந்திரன் மாயமானதாக அவரது தாய் செல்லம்மா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ராஜேந்திரன் மீது அவரது மனைவி கிண்டி மகளிர் போலீசில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார். இதற்காக ராஜேந்திரனையும், அவரது மனைவியையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், ராஜேந்திரன் மாயமாகி உள்ளார். ராஜேந்திரனுக்கும் பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. அவர், ராஜேந்திரனை கடத்தினாரா அல்லது வரதட்சணை வழக்குக்கு பயந்து ராஜேந்திரனே தலைமறைவாக உள்ளாரா என போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, பிரண்ட்ஸ் ஆப் போலீசாக இருக்கும் சாலிகிராமத்தை சேர்ந்த வீரா (எ) வீரராஜனிடம் (27) தீவிர விசாரணை நடந்து வருகிறது.