7 புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் ஜெயலலிதா
1கருத்துகள்
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்த 7 புலிக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பெயர் சூட்டினார். சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் ஏராளமாக உள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்பு இங்கு கலப்பின முறையில் 3 புலிக் குட்டிகள் பிறந்தன. மேலும், வெள்ளைப் புலி ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றது. அதில் 2 ஆண் குட்டி, 2 பெண் குட்டிகள்.
புதிதாக பிறந்த 7 புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா மற்றும் வனத்துறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, உயிரியல் பூங்கா வளாகத்தில் இன்று காலை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ஆண் வெள்ளை புலி குட்டிகளுக்கு அர்ஜுனா, ஆத்ரேயா என்றும் 2 பெண் வெள்ளை புலி குட்டிகளுக்கு காவேரி, சித்ரா எனவும் பெயர் சூட்டினார். கலப்பினத்தில் பிறந்த 3 பெண் புலிக் குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று பெயர் வைத்தார்.
பின்னர் புலிக் குட்டிகளின் அருகில் நின்று, அவை விளையாடுவதை சிறிது நேரம் கண்டு ரசித்தார். 2011-ம் ஆண்டு தான் பெயர் சூட்டிய ராமா என்ற ஆண் வெள்ளை புலி, சித்ரா என்ற பெண் வெள்ளை புலிகளையும் முதல்வர் பார்த்தார். அம்மாவிடம் இருந்து பிரிந்து தவித்த 4 யானை குட்டிகள் வண்டலூர் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. அந்த குட்டிகளையும் ஜெயலலிதா பார்வையிட்டு, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு முறைகளை கேட்டறிந்தார். நீர் நாய் இருப்பிடத்துக்கும் முதல்வர் சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து, உயிரியல் பூங்காவில் ரூ.7 கோடியே 13 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள தலைமை நிர்வாக கட்டிடம், ரூ.5 கோடியில் கட்டப்பட உள்ள வன உயிரினங்களின் இனப்பெருக்க அறிவியல் ஆராய்ச்சி மைய கட்டிடம், ரூ.7 கோடியில் கட்டப்பட உள்ள தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமை ஆக்குதல் திட்ட தலைமை அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ.21 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினர்.
முன்னதாக, பூங்காவுக்கு வந்த முதல்வரை வனத்துறை அமைச்சர் பச்சைமால், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






















xxx
qqqq
3/17/2013 9:32:12
ithu நாட்டுக்கு ரொம்ப முக்கியம் jeyalathithavukku