சென்னை: சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழை வளர்க்க கல்வி நிறுவனங்களின் பங்கு அதிகமாக தேவை என்று செம்மொழி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அனைத்தும் தமிழில் மாற்றப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் கேம்பஸ் இனிமேல் ‘தொல்காப்பியர் வளாகம்’ என்று மாற்றப்படும். அதே போல், மெரினா கேம்பஸ் பரிதிமாற் கலைஞர் வளாகம் என்றும், தரமணி கேம்பஸ் மறைமலையடிகள் வளாகம் என்றும், சேத்துப்பட்டு கேம்பஸ் சேக்கிழார் வளாகம் என்றும், மதுரவாயல் கேம்பஸ் கம்பன் வளாகம் என்றும், கிண்டி கேம்பஸ் பாரதியார் வளாகம் என்று பெயர் மாற்றப்படுகிறது. அந்த அறிஞர்களின் சிலைகளும் அந்த வளாகங்களில் நிறுவப்படும். பல்கலை நிர்வாகம் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் மாற்றப்படும். வரும் 5ம் தேதி முதல், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வருகை பதிவேட்டில் கட்டாயம் தமிழில் கையெழுத்திட வேண்டும். அவர்களின் மனுக்களிலும் தமிழில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். செப்டம்பர் 15ம் தேதி முதல் பல்கலைக்கழக சாப்ட்வேர் அனைத்தும் தமிழில் மாற்றப்படும். தமிழ் லெக்சிகன் (பேரகராதி) திட்டத்தில் புதிய தமிழ்ச் சொற்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன. புதிய தமிழ்ச் சொற்களை கண்டுபிடிப்பவர்கள்
www.tamilwordcorpus.unom@gmail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் அதையும் அகராதியில் சேர்த்துக் கொள்வோம். புதிதாக தொடங்கப்படும் கல்லூரிகள், தமிழ் வழியில் கற்பிக்க முன்வந்தால், அவர்களுக்கு உடனடியாக பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும். அனுமதி கட்டணத்திலும் சலுகை வழங்கப்படும்.