பட்டு நூல் மீதான வரி விதிப்பை கண்டித்து ஒருவாரம் தொடர் வேலைநிறுத்தம் கைத்தறி நெசவாளர்கள் முடிவு
பதிவு செய்த நேரம்:2013-03-16 11:34:55மேட்டுப்பாளையம், : சிறுமுகை கைத்தறி பட்டு நூல் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கத்தின் கூட்டம் சிறுமுகையில் நடந்தது.
சிறுமுகை நெசவாளர் சங்கத்தின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். ஜீவானந்தம், குமார், லேகநாதன், வீராச்சாமி, செந்தில்குமார், சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, பகத்தூர், கிச்சகத்தியூர், மூலத்துரை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேலான நெசவாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பல்வேறு பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் பயனடைந்துவருகின்றனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மென்பட்டு அதிக அளவு நெசவு செய்யப்படுகிறது. இந்த பட்டு வகைக்கு உள், வெளிநாடுகளில் நல்லவரவேற்புள்ளது. மென்பட்டை பொறுத்த வரையில், உள்நாடு மற்றும் சீனா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டு நூலை கொண்டு மென்பட்டு தயாரிக்கின்றனர். வெளிநாட்டிலிருந்த இறக்குமதி செய்யப்படும் பட்டு நூல் விலை ரூ 3400க்கு விற்கப்படுகிறது.
கடந்த காலங்களில் மத்தியரசு 5 சதவீதம் இதற்கு நேரடியாக வரிவிதிப்பு மூலம் விதித்தது. தற்போது அறிவித்த மத்திய பட்ஜெட்டில் 10 சதவீதம் வரியை உயர்த்தி 15 சதவீதமாக ஆக்கியுள்ளனர். இதனால் பட்டு நூல் கிலோவிற்கு ரூ 600 கூடுதலாக கொடுக்க வேண்டியுள்ளது.
மத்திய அரசு உள் நாட்டில் பட்டு உற்பத்தி குறைந்த நிலையில் பட்டு நூல் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
வெளிநாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பட்டு நூல்களுக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளது.
இதனால் கைத்தறி நெசவாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. ஏற்கனவே ஆள் பற்றாக்குறை, விலையுயர்வு ஆகிய காரணங்களால் கைதொழில் நெசவு நலிந்து வருகிறது.
பட்டு நூலின் மீது வரிவிதிப்பு வாழ்க்கை தரத்தை கடுமையாக பதிக்கும். இதனால் மத்திய அரசு உடனடியாக இதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி பட்டு நூல் சேலை நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் வரும் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை 1 ஒரு வாரம் தொழிலை கைவிட்டு போராட்டம் நடத்துவது, கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரனிடம் குடும்பத்துடன் சென்று புகார் மனு அளிப்பது, இதை தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.










