வீட்டின் கதவை உடைத்து 20 சவரன், ரூ1.5 லட்சம் துணிகர கொள்ளை
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:13:57
துரைப்பாக்கம், : சென்னை அருகே பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமிகள், 20 சவரன் நகை மற்றும் ரூ1.5 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். மேலும் சாவகாசமாக அமர்ந்து மது அருந்திவிட்டு தப்பியுள்ளனர்.
சென்னை அருகே காரப்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (43). மேல் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு கீழ் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது தாய் நாகமுத்து (68), மயிலாப்பூரிலுள்ள வீட்டில் வசிக்கிறார்.
உடல்நலம் பாதித்த தாயை கவனித்து கொள்வதற்காக தற்போது குடும்பத்துடன் மயிலாப்பூரில் தங்கியுள்ளார் வெங்கடேஷ். காரப்பாக்கத்தில் வெங்கடேஷ் வீட்டுக்கு பின்னால் உறவினர் நாகேஷ்வரி வீடு உள்ளது. வெங்கடேஷ் வீட்டில் யாரும் இல்லாததால் தினமும் வீட்டு வாசலில் கோலம் போட நாகேஷ்வரி செல்வது வழக்கம்.
நேற்று காலை கோலம் போட வந்தபோது, வெங்கடேஷ் வீட்டின் கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே, வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. 25 சவரன் நகை, ரூ1.50 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. கொள்ளையர்கள் திருடிவிட்டு வீட்டில் அமர்ந்து சாவகாசமாக மது அருந்தி விட்டு காலி பாட்டில்கள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
புகாரின்பேரில் கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
அண்ணா நகர்: வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் அடுத்த பாலாஜி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (45). டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினார்.
அப்போது திறந்து கிடந்த பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள் புகுந்த ஆசாமிகள் பூஜை அறையில் இருந்த பீரோவை திறந்து 8 சவரன் நகை, ரூ25 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். காலையில் எழுந்ததும் பீரோ திறந்து கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
புகாரின்படி, கோயம்பேடு மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசாமிகளை தேடுகின்றனர்.
இன்று இரவு திருடுவது எங்கு?
போதையில் உளறிய 4 பேர் கைது
நீலாங்கரை பகுதியில் அடிக்கடி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து தனிப்படையினர் ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஈஞ்சம்பாக்கம் மதுக்கடை பார் ஒன்றில் போதையில் இருந்த 4 பேர், இன்று இரவு எங்கு திருடலாம் என்பது தொடர்பாக பேசியுள்ளனர். இதை கவனித்த பார் ஊழியர்கள் நீலாங்கரைக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், தேனாம்பேட்டை போயஸ் தோட்டம் நலஞ்சேரி பாலா என்ற பாலமுருகன் (35), நீலாங்கரை ராஜேந்திரா நகர் 8வது தெரு பாபு (42), திருவிடந்தை பொன்னியம்மன் கோயில் தெரு ஆனந்தபாபு (22), திருப்போரூர் அடுத்த கண்டிகை இந்திரா நகர் 3வது தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (26) ஆகியோர் என்பதும் நீலாங்கரை பகுதி வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இவர்கள் பீரோவுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது, பகலில் வீடுகளை நோட்டமிட்டு இரவில் ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரிந்தது. இவர்களிடம் இருந்து 10 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.










